காரைக்குடி, மே 21: பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் உரிய பாதுகாப்பு வசதியுடன் இயக்கப்படாவிட்டால் சாலையில் இயக்குவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என மோட்டர் வாகன ஆய்வாளர் (நிலை 1) முருகன் தெரிவித்தார். காரைக்குடி பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை அழகப்பா கலைக்கல்லூரி மைதானத்தில் வருவாய் கோட்டாசியர் ஈஸ்வரி, மோட்டர் வாகன ஆய்வாளர் (நிலை 1) முருகன், டிஎஸ்பி அருண், தேவகோட்டை கல்வி மாவட்ட அதிகாரி சாமிசத்தியமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பள்ளி வாகனங்களில் உள்ள அவசரகால கதவு, முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு கருவி, பெர்மிட், இன்சூரன்ஸ், படிகள், கதவுகளில் அமைக்கப்பட்டுள்ள பூட்டுகள் சரியாக உள்ளதா என்பது உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. 228 பள்ளி பஸ்களுக்கு 153 பஸ்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டன. இதில் பஸ்படி பழுதாகி இருந்தது, அவசரகால கதவுகள் சரியில்லாமல் இருந்தது, முதலுதவி பெட்டி காலவதி ஆனது உள்பட பல்வேறு காரணங்களுக்காக 7 க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. மே 31ம் தேதிக்குள் இந்த புகார்களை சரி செய்யாவிட்டால் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோட்டர் வாகன ஆய்வாளர் (நிலை 1) முருகன் கூறுகையில், `` பள்ளி வாகனங்களை மற்ற வாகனங்களோடு வித்யாசப்படுத்தி காட்ட கட்டாயம் மஞ்சள் பெயின்ட் அடிக்க வேண்டும். படிக்கள் 25 செ.மீ உயரம் இருக்க வேண்டும். டிரைவர்களுக்கு என தனியான கேபின் இருக்க வேண்டும். மாணவர்களின் புத்தகபை வைக்க தனி இடம் இருக்க வேண்டும். முதலுதவி பெட்டியில் நடப்பில் உள்ள மருந்துகள் வைத்திருக்க வேண்டும். டிரைவர்கள் 5 வருடம் அனுபவம் ஆனவர்களை நியமிக்க வேண்டும் வாகனத்தின் முன்னும் பின்னும் ரிப்ளக்டர் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்கள் வரும் 31ம் தேதிக்குள் 100 சதவீதம் முடிந்தது இருக்க வேண்டும். முழுமையான பாதுகாப்புடன் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் மாணவர்களுடன் பஸ் இயப்படுவது கண்டறியப்பட்டால் தகுதி சான்று ரத்து செய்யப்படும். வாகனம் பறிமுதல் செய்யப்படும்’’ என்றார்.