கிருஷ்ணகிரி, மே 21: பர்கூர் அடுத்த புஷ்பகிரி தூயமலர் மலை மாதா கோயில் தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட புஷ்பகிரி தூயமலர் மலை மாதா திருத்தலத்தின் பெருவிழா, கடந்த 12ம் தேதி ஜெபமாலை, கொடிபவனி, கொடியேற்றம், திருப்பலியுடன் துவங்கியது. பின்னர், 17ம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, தேர்பவனி, திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் காலை, மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், திருத்தல பெருவிழா திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு காவேரிப்பட்டணம் பங்கு தந்தை தேவசகாயம் மற்றும் மறை மாவட்ட குருக்கள் தலைமையில் திருப்பலி, தேர்மந்தரிப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. அதை தொடர்ந்து, இரவு 8 மணிக்கு ஆடம்பர தேர்பவனி பங்கு ஆலயத்தை நோக்கி சென்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். நேற்று மாலை நன்றி திருப்பலியுடன், கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.