×

புதுக்கோட்டை முதல் கீரனூர் வரை பேருந்து நிழற்குடையில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி பிரச்னைக்கு தீர்வு காணாமல் தட்டிக்கழிக்கும் அதிகாரிகள்

புதுக்கோட்டை, மே 21:  புதுக்கோட்டையில் இருந்து கீரனூர் வரை சாலையில் உள்ள பேருந்து நிழற்குடைகளில் பயணிகள் அமரும் இருக்கைகள் இல்லாததால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் அவதிக்குள்காகி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் இருந்து கீரனூர் செல்லும் வழியில் முத்துடையாம்பட்டி, மேலூர், சத்தியமங்கலம், நார்த்தாமலை, அம்மாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் வசதிக்காக நிழற்குடைகள் அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடைக்குள் பயணிகள் அமர்ந்திருக்க வசதியாக இரும்பிலான சேர்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் நீண்ட நேரம் பேருந்திற்கு காத்திருக்கும் பயணிகள், பெரியோர்கள் சற்று அமர்ந்திருந்து செல்வார்கள். இந்நிலையில் போதிய பராமரிப்பு பணிகள் செய்யாததால் இருக்கைகள் தொடர்ந்து சிதிலமடைந்து தற்போது அந்த இருக்கைகள் எங்கே போனது என்றே தெரியவில்லை. இதனால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் பஸ் வரும்வரை உட்கார வழியின்றி கால்கடுக்க நிற்கின்றனர். சிலர் இருக்கைகள் இல்லாத இரும்பு கம்பிகளில் அமர்ந்து உள்ளனர்.

இதனால் பயணிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பெரியோர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொண்டு பேருந்து நிழற்குடைகளில் உள்ள இருக்கைகள் புதிதாக அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது: நிழற்குடையில் உள்ள இருக்கைகள் எங்கே போனது என்று தெரியவில்லை. இதனால் பேருந்துகள் வரும்வரை நிற்க முடியாமல் இருக்கும் கம்பிகளில் அமர்ந்துள்ளோம். இது எங்களுக்கு போதிய சவுகரியமாக இல்லை. வேறு வழியின்றி கம்பியை பயன்படுத்துகிறோம். நெடுஞ்சாலை துறையிடம் தெரிவித்தால் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்கின்றனர். பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்தால் நெடுஞ்சாலை துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்கின்றனர். இதனால் மாறிமாறி ஒருவரையொருவர் குறை சொல்லி பொறுப்புகளை தட்டிக்கழிக்கின்றனர். தொடர்ந்து பிரச்னை சரிசெய்யப்படாமல் அப்படியே கிடக்கிறது. இனியாவது சம்மந்தப்பட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுத்து விரைந்து புதிய இருக்கைகள் அமைத்து தர முன்வர வேண்டும் என்றனர்.


Tags : bus shelter ,passengers ,Pudukkottai ,Keeranur ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...