×

குண்டும் குழியுமாக மாறிய பாடாலூர்- சீதேவிமங்கலம் சாலை பொதுமக்கள் அவதி

பாடாலூர், மே 21: பாடாலூரிலிருந்து சீதேவிமங்கலம் செல்லும் சாலை போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆலத்தூர் தாலுகா பகுதியில் பாடாலூர்  சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு முக்கிய வணிக தலமாக விளங்கி வருகிறது. பாடாலூர்  கிராமத்திலிருந்து சீதேவிமங்கலம் செல்லும் சாலை முக்கிய இணைப்பு சாலையாக விளங்கி வருகிறது. இந்த சாலை வழியாக தான் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், சிறுவயலூர், மாவலிங்கை, குரூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்  நாள்தோறும் பல்வேறு பணிகளுக்காக  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பாடாலூர் வந்து செல்கின்றனர்.
மேலும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் கிணற்று பாசன விவசாய நிலங்களும், மானாவாரி விவசாய நிலங்களும் உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் தங்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை ஓட்டி செல்கின்றனர். விவசாய நிலங்களுக்கு தேவையான அனைத்து இடுபொருள்களையும் எடுத்து செல்கின்றனர். விவசாய நிலங்களில் விளையும் தானியங்களையும் எடுத்துவர வேண்டும்.

பாடாலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சீதேவிமங்கலம், கூத்தனூர், நாட்டார்மங்கலம், செட்டிகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள் நாள்தோறும் சைக்கிள் மற்றும் பஸ், வேன் மூலம் வந்து செல்கின்றனர் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும்போது பாடாலூர் வந்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு மீண்டும் வந்து எடுத்து செல்கின்றனர்.
இதுபோல் பல்வேறு பயன்பாட்டுக்கும் மிகவும் முக்கியமான சாலையாக உள்ள இந்த சாலை குண்டும், குழியுமாக  போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குண்டும் குழியுமாக உள்ள பாடாலூர்- சீதேவிமங்கலம்  சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Pathaloor-Seedivamangalam ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி