×

சக காவலரை தாக்கிய வழக்கில் போலீஸ்காரருக்கு 2 ஆண்டு சிறை

திருத்தணி, மே 21: திருத்தணி பைபாஸ் சாலையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (37). இவர் கடந்த 2007ம் ஆண்டில் சென்னையில் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தார். அப்போது பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (38) என்பவரும்  திருவள்ளூர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இரண்டு காவலர்களும் ஒரு பெண்ணை காதலித்து வந்தனர். இதில், அந்த பெண்ணை ரமேஷ் திருமணம் செய்துக் கொண்டார். இதனால், காவலர்கள் ராஜேஷிக்கும், ரமேஷிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

அதே ஆண்டு நவம்பர் மாதம் ராஜேஷ் முன்விரோதம் காரணமாக ரமேஷை தாக்கி கையை உடைத்தார். இதுகுறித்து ரமேஷ் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ராஜேஷை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திருத்தணி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் காவலர் ரமேஷின் கையை உடைத்த ராஜேஷிக்கு 2 ஆண்டு சிறை தண்டணையும், ₹13,500 அபராதம் செலுத்த வேண்டும் என  குற்றவியல் நீதிபதி சுதாராணி நேற்று தீர்ப்பு அளித்தார். மேலும் ராஜேஷ், ரமேஷ் மீது கொடுத்த புகாரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து போலீசார் ராஜேஷை கைது செய்து சிறையில்
அடைத்தனர்.

Tags : policemen ,
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்