×

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்

செங்கோட்டை, மே 19:  பண்பொழி திருமலை குமார சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடந்தது.  இதில் திரளானோர் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும்  நேர்த்திக்கடன் செலுத்தினர். பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு  நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை  நடந்தது. திருவிழாவில் பண்பொழி, கணக்கப்பிள்ளை வலசை, குத்துக்கல்வலசை, இலத்தூர்,  அச்சன்புதூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகைதந்த திரளானோர் தரிசித்தனர்.

மேலும் பக்தர்களின் பால்குட ஊர்வலம் கோயிலை வந்தடைந்ததும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி வழிபட்டனர். மேலும் அலகு குத்தியும், புஷ்ப காவடி எடுத்தும்  சுவாமிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 5 மணிக்கும் சிறப்பு பாலாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலையும் பொருட்படுத்தாமல் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையாளர் அருணாசலம், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் அருணாசலம், அச்சன்புதூர் உதவி ஆய்வாளர் சனல் குமார் மற்றும் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Krishna ,Thirumalakumara Swamy Temple ,
× RELATED மூச்சை அடக்கினால் மனது அடங்கும்