திருப்பூர், மே19: வாக்களிக்க பணம் கொடுக்கும் நபர்களிடம் நம்பிக்கை, நாணயம், தூய நிர்வாகத்தை எதிர்பார்க்க முடியாது என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியிருப்பதாவது: ஜனநாயக நாட்டில் அனைவரும் வாக்களிப்பது நம்முடைய கடமை. மக்கள் சேவை செய்பவர்கள் எதிர்பார்ப்புகள் இன்றி சொந்த பணத்தை மக்களுக்கு கொடுத்து உதவி செய்ய வேண்டும். ஏழை, எளியோர் முதல் பணக்காரர்கள் வரை கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தை உள்ளாட்சி அமைப்புகளில் வரியாக செலுத்தும் தொகைகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக மத்திய, மாநில அரசுகள் வழங்குகிறது. இந்த நிதியில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக தரமான பணிகளை செய்ய வேண்டும். பணத்தை வாங்கி கொண்டு ஓட்டளிப்பது அதிகரித்து விட்டது. எங்கள் வீட்டில் இவ்வளவு ஓட்டு என பேரம் பேசி பெற்றுக்கொண்டு ஓட்டளிக்கின்றனர்.
இது, ஜனநாயகத்துக்கு பேராபத்து. இன்று கால்களை பிடித்து, பணம் கொடுத்து, ஓட்டு வாங்குவோர், நாளை கழுத்தை நெரிப்பது உறுதி. அரசியல் கூட்டங்களுக்கு பணம், மது, கறிவிருந்து கொடுத்து வாகனங்களில் அழைத்து செல்கின்றனர். மொத்தத்தில், தேர்தலை எதிர்கொள்ள பணமே பிரதானம் என்றாகி விட்டது. பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டளிப்பதும், ‘கிட்னி’யை விற்பதும் ஒன்றுதான். அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விநியோகிப்பதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்து வெற்றி பெறும் நபர்களிடம் நேர்மையும், தூய நிர்வாகத்தை எதிர்பார்க்க முடியாது. வாக்காளர்களே பணம் கொடுக்காத நேர்மையான வேட்பாளர்களுக்கு வாக்களித்து பணநாயகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.