கீழ்வேளூர், மே19: நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூர் நன்மாழியாள் சமேத தியாகராஜ சுவாமி கோயில் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 8ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 9ம்தேதி கொடிஏற்றமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தினம் தோறும் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது. 12ம் தேதி தியாகராஜார் வசந்த விழா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருத் தேர் திருவிழா நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. கீழ வீதியில் இருந்து தேர் புறப்பட்டு தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் கீழ வீதி வந்து சேர்ந்தது. தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், அப்பர் சுவாமிகள் வழிப்பாட்டு மன்றம், கிராமவாசிகள் செய்திருந்தனர்.