×

இறுதிக்கட்ட பிரசாரம் விறுவிறுப்பு ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

தமிழகத்தில் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 19ம்  தேதி  இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இன்று (17ம் தேதி) மாலை 6 மணியுடன்  பிரசாரம் ஓய்கிறது. தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 38  நாடாளுமன்ற தொகுதி, 18 சட்டமன்ற  தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த  மாதம் 18ம் தேதி நடந்தது. காலியாக இருந்த ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி,   திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான  இடைத்தேர்தல் மே  19ம் தேதி நடக்கிறது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளராக சண்முகையா, அதிமுக வேட்பாளராக மோகன், அமமுக வேட்பாளராக சுந்தர்ராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக காந்தி உட்பட 15 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

சண்முகையாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்.30, மே 1, 2  ஆகிய தேதிகளில் முதல் கட்ட பிரசாரத்திலும், மே 14ம் தேதி 2ம் கட்ட  பிரசாரத்திலும் ஈடுபட்டார். தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து  பிரசாரம் ெசய்தனர். அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜை ஆதரித்து 2 கட்ட  பிரசாரம் செய்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தனது பிரசாரத்தை ரத்து செய்து விட்டார். மேலும்  கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வருகிற 19ம் தேதி காலை 7  மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது. இதை முன்னிட்டு இன்று (17ம் தேதி)  மாலை 6  மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. திமுக வேட்பாளர் சண்முகையா இன்று மாலை மாப்பிள்ளையூரணியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதிமுக வேட்பாளர் மோகன் ஓட்டப்பிடாரம் பஜாரிலும், அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் சிலுவைப்பட்டியிலும் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கின்றனர். பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்வதால் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில்  ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.

Tags : rites ,constituency ,Vitthapiruppu ,
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...