×

ஜெ. பாதையில் பயணிக்கும் எடப்பாடி சரத்குமார் சர்டிபிகேட்

ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை தொடர அதிமுகவுக்கு வெற்றியை தாருங்கள் என்று ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரசாரம் செய்த சமக தலைவர் சரத்குமார் பேசினார். ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து சமக தலைவர் சரத்குமார், நேற்று பிரசாரம் செய்தார். தொகுதிக்குட்பட்ட பேரூரணி, கூட்டாம்புளி, குலையன்கரிசல், ஸ்பிக்நகர் மற்றும் தாளமுத்துநகரில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து அவர் பேசியதாவது:

ஓட்டப்பிடாரம் வந்ததும் நினைவிற்கு வருவது வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வஉசி, வாஞ்சிநாதன் ஆகியோர்தான். வீரம் நிறைந்த மண். இந்த மண்ணில் நின்று வேட்பாளர் மோகன் வாக்குகள் கேட்கிறார். கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா கொடுத்த வாக்குகளை நிறைவேற்றி சிறப்பாக செயல்பட்டவர். அவர் விட்டுச் சென்ற பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்கிறார்.

மக்கள் முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்தி ஜெயலலிதா பாதையில்தான் எடப்பாடி பழனிசாமி பயணித்து வருகிறார். தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி உங்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. மக்களுக்காக நான் என்று உழைத்தவர் ஜெயலலிதா. அவரது வழிவந்த ஆட்சியும் அவ்வாறே உள்ளது.

வேட்பாளர் மோகன் சிறந்த முறையில் மக்கள் பணியாற்றுவார். அதிமுக வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற அதிமுகவிற்கு வாக்களியுங்கள். தண்ணீர் பிரச்னைக்காக 3வது உலகப்போர் மூண்டுவிடக் கூடாது என்பதற்காக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தியவர் ஜெயலலிதா. இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, வேட்பாளர் மோகன், சமக மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர், மாவட்ட செயலாளர் எம்எக்ஸ்.வில்சன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : track ,J. Edathapadi Sarathkumar Shirdipike ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!