×

அடிக்கல் நாட்டி 367 நாட்களாகிறது சிறுவாச்சூரில் ஆமை வேகத்தில் நடக்கும் தரைவழி மேம்பாலம் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பெரம்பலூர், மே 17: அடிக்கல் நாட்டி 367 நாட்களான நிலையில் சிறுவாச்சூர் தரைவழி மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மேலும் உயிர்ப்பலி ஏற்படும் முன் பணிகளை விரைந்து முடிக்க  வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ரூ.13.03 கோடி மதிப்பில் தரைவழி மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்தாண்டு மே 14ம் தேதி நடந்தது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குனர் சங்கரசுப்ரமணியன், பெரம்பலூர் எம்பி மருதராஜா, கலெக்டர் சாந்தா முன்னிலையில் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறுவாச்சூர் தரைவழி மேம்பாலம் கட்டுவதற்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். அப்போது பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது, நாட்டின் மொத்த பயணிகள் போக்குவரத்தில் 80 சதவீத போக்குவரத்தும், மொத்த சரக்கு போக்குவரத்தில் 65 சதவீத சரக்கு போக்குவரத்தும் 2 சதவீத தேசிய நெடுஞ்சாலையில் தான் நடந்து வருகிறது. இந்த சாலை வசதியை 2 மடங்காக உயர்த்த வேண்டும் என்பதே இந்த துறையின் கேபினட் அமைச்சர் நிதின் கட்கரிக்கு பிரதமர் மோடி அறிவித்த இலக்காகும். அதோடு தேசிய நெடுஞ்சாலையின் தரத்தை உயர்த்த வேண்டும். விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.


உலகத்தில் தலைசிறந்த சாலை போக்குவரத்தாக இந்திய சாலை போக்குவரத்து திகழ வேண்டும் என்றார். ஆனால் சிறுவாச்சூர் மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 367 நாட்களாகி விட்டது. அடிக்கல் நாட்டு விழா முடிந்த பிறகு சர்வீஸ் சாலைகளை அமைப்பதற்கே ஓராண்டாகிவிட்டது.  சிறுவாச்சூர் பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்த விபத்துகளில் 3 ஆண்டுகளில் 10 பேர் இறந்துள்ளனர். 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். 3 ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் இப்பகுதி பிளாக் ஸ்பாட் என அறிவிக்கப்பட்டு தரைவழி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 12 மீட்டர் அகலம், 5.50 மீட்டர் உயரம், வடக்கே 161.30 மீட்டர் நீளம், தெற்கே 355.95 மீட்டர் மற்றும் 402.56 மீட்டர் நீளமும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. சர்வீஸ் சாலைக்கே ஓராண்டு என்றால் மேம்பாலம் அமைக்க எத்தனை ஆண்டு ஆகுமோ என தெரியாத நிலையில் மேலும் விபத்துகள் தொடர்ந்தால் உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தரைவழி மேம்பாலம் அமைக்கும் பணிகளை ஆமை வேகத்தில் நடத்தாமல் விரைந்து துவங்கி முடிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு சிறுவாச்சூர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : construction ,turret ,Trivandrum ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...