சூலூர்,மே17:சூலூரில் இன்று நடைபெறுவதாக இருந்த கமல் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சூலூரில் பிரசாரம் செய்ய அந்த கட்சியினர் அனுமதி கேட்டிருந்தனர். ஏற்கனவே பிரசாரத்தின் போது கமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே அவருக்கு சூலூரில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கக் கூடாது எனக்கூறி இந்து முண்ணனி பொறுப்பாளர் ராஜ்குமார் என்பவர் சூலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் கமலின் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கருமத்தம்பட்டி போலீஸ் டிஎஸ்பியிடம் கேட்ட போது, கமல் பிரசாரத்திற்காக அவரது கட்சி சார்பில் அனுமதி கேட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் கலந்து ஆலோசித்து தற்போது உள்ள சூழ்நிலையில் அவரது பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். பிரசாரத்தின் கடைசி நாளான இன்று காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.