செய்யூர்: அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். கல் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சேரியில் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு அரசு விரைவு பஸ் சென்னை நோக்கி சென்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். செய்யூர் அடுத்த கடப்பாக்கம் அருகே வந்தபோது, புதுச்சேரி நோக்கி செல்லும் எதிர் சாலையில் 2 மர்ம நபர்கள் பைக்கில் வந்தனர். அவர்கள் திடீரென அரசு பஸ்சின் மீது கற்களை வீசினர்.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்ததில் டிரைவர் படுகாயம் அடைந்தார். எனினும், டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை கட்டுக்குள் கொண்டு வந்து ஓட்டியதால் பயணிகள் உயிர் தப்பினர். இதையடுத்து படுகாயம் அடைந்த டிரைவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து டிரைவர் கொடுத்த புகாரின்படி, சூணாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் மீது கல்வீசி தாக்கிய 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.