பல்லாவரம்: குன்றத்தூர் அருகே தரப்பாக்கம் என்னும் இடத்தில், தாம்பரம்- மதுரவாயல் செல்லும் புறவழிச்சாலையை ஒட்டியுள்ள அணுகு சாலையில் தனியாருக்கு சொந்தமான ஏராளமான தண்ணீர் கம்பெனிகள் உள்ளன. இங்கு எடுக்கப்படும் தண்ணீர் சென்னை முழுவதும் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று, இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி, தரப்பாக்கம் மற்றும் தண்டலம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர்,அந்த தண்ணீர் கம்பெனியை மூடக்கோரி முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்றத்தூர் போலீசார் மற்றும் பல்லாவரம் தாசில்தார் ஹேமாவதி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் பிரச்சினை தீரும் வரை தனியார் தண்ணீர் கம்பெனிகளை மூடி வைக்குமாறு, தாசில்தார் தெரிவித்ததையடுத்து, தற்காலிகமாக தண்ணீர் கம்பெனிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.