சாத்தூர், மே 16: சாத்தூர் அருகே, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. சாத்தூர் அருகே, சின்னக்காமன்பட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், வணிகவியல் ஆகிய பிரிவுகள் உள்ளன. 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவின்பேரில் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதனை ஆட்சிக்குழு உறுப்பினர் தீனதயாளன் மேற்பார்வையிட்டார். கல்லூரி முதல்வர் முத்துக்குமார் தலைமை வகித்தார். தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கவுன்சலிங் நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.