×

முத்துப்பேட்டையில் ஆர்ஐ அலுவலகம் பூட்டியே கிடப்பதால் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் அவதி நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை, மே 16: முத்துப்பேட்டை ஆர்ஐ அலுவலகம் சரிவர திறக்கப்படாததால் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புது காளியமன் கோவில் அருகே ஆர்ஐ அலுவலகம் இயங்கி வந்தது. அந்த கட்டிடம் பழுதடைந்ததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மாடியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அதே வாடகை மாடி கட்டிடத்தில்தான் ஆர்ஐ அலுவலகம் செயல்படுகிறது. இதனால் முதியோர்கள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மாடி ஏறுவதில் சிரமப்படும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் ஆர்ஐ அலுவலகத்தை பல மாதங்களாக சரிவர திறப்பதில்லை என்றும், மாதத்தில் பல நாட்கள் முற்றிலும் திறப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தினந்தோறும் முத்துப்பேட்டை ஆர்ஐ அலுவலகத்தில் சான்றிதழ் வாங்குவதற்காக மக்கள் காத்துகிடக்கின்றனர்.

நேற்று காலை 9 மணிக்கே ஆர்ஐ அலுவலகம் வந்த மக்கள் அங்கு வருவாய் ஆய்வாளர் இல்லாததால் வழக்கம்போல் அவரை செல்பேசியில் தொடர்பு கொண்டனர். சற்றுநேரத்தில் வந்துவிடுவதாக கூறியவர் மதியம் 1 மணியாகியும் வரவில்லை. கடைசியாகபோன் போட்ட ஒருவரிடம் திருத்துறைப்பூண்டியில் இருக்கேன் வந்துதான் பார்க்கமுடியும் என்று கூறினார்.  இதனால் வேறு வழியின்றி சான்றிதழ்கள் பெறாமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து சான்றிதழ்பெற வந்தவர்களின் ஜாம்புவானோடை  ஜெயராணி கூறுகையில்: ஓஏபி விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்க மூன்று நாட்களாக வந்து செல்கிறேன். ஆர்ஐயை பார்க்க முடியவில்லை. தினமும் ஏமாற்றத்துடன் செல்கிறேன். ஆர்ஐயை பார்த்தபிறகும் மறுபடியும் எத்தனைநாள் அலைய போறேன் என்பது தெரியவில்லை என்றார். ஆசாத்நகர் சல்மான்கான் கூறுகையில்: எனக்கு முதல் பட்டதாரி சான்றிதழ் பெற ஒரு வாரமாக வந்து ஆர்ஐயை பார்க்க முடியாததால் ஏமாற்றத்துடன்தான் திரும்பி செல்கிறேன்.போனில் தொடர்புக்கொண்டால் வருவதாக கூறுகிறார்.

ஆனால் வருவதில்லை என்றார் கவலையுடன். செங்காங்காடு நடராஜன் கூறுகையில்: வாரிசு சான்றிதழ் பெற ஒரு வாரமாக அலைகிறேன் ஆர்ஐயை பார்க்கவே முடியவில்லை. வயதான காலத்தில் அதுவும் தற்பொழுது வெயில் கொளுத்துவதால் வேறு வழியின்றி சுமார் கிலோமீட்டர் தூரத்திலிருந்து தினமும் வந்து அலைகிறேன் என்றார். இதுகுறித்து ஆர்ஐயை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, ஒருவரிடம் (திருத்துறைப்பூண்டியில் இருப்பதாக கூறியவர்) அதெல்லாம் இல்லை சார். தினமும் அலுவலகம் திறக்கிறோம். பக்கத்தில் தான் வந்துகிட்டு இருக்கேன். இப்ப வந்துருவேன் சார் என்று கூறி போனை வைத்தார். அடுத்த நிமிடத்தில் அலுவலகம் வந்தார்.  இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், முத்துப்பேட்டை ஆர்ஐ அலுவலகம் திறப்பதே கிடையாது. ஆர்ஐ என்பதே தெரியாது அவரை பார்த்ததே கிடையாது. இந்த அலுவலகத்தில் உதவியாளர்கள் கூட இருப்பதில்லை. இதனால் தினமும் ஏராளமான மக்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர். மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

Tags : RI Office ,
× RELATED நெல்லிக்குப்பம் ஆர்ஐ அலுவலகம் திறப்பு