×

பாபநாசம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள், வணிகர்கள் அவதி

பாபநாசம், மே 16: பாபநாசம் பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள், வணிகர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தால் கடந்த 3 மாதமாக பாபநாசம் பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வீட்டிலேயே பொதுமக்கள் முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் பாபநாசம் பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வணிகர்கள் தினம்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பாபநாசம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், பாபநாசம் பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பகல் நேரங்களில் சமையல் செய்யும் பணி பாதிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியவில்லை. மேலும் கொசுக்கடியால் அவதிப்பட்டு வருகிறோம். மின்தடையால் முதியவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மின்தடை ஏற்படும் நேரத்தை முன்கூட்டியே அறிவித்தால் நாங்கள் முன்னெச்சரிக்கை இருக்க முடியும். ஆனால் அறிவிக்கப்படாத மின்வெட்டால் என்ன செய்வதென்றே புரியவில்லை. எனவே மின்தடை ஏற்பட்டால் அதை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : area ,Papanasam ,traders ,
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...