×

பதிவு செய்யப்படாத விதை ரகங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை உற்பத்தியாளர்களுக்கு எச்சரிக்கை

தஞ்சை, மே 16: விதை உற்பத்தியாளர்கள் பதிவு செய்யப்படாத விதை ரகங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், எள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் பயிர் செய்யப்படுகிறது. இவற்றை பயிரிட வேளாண்துறை மட்டுமின்றி தனியார் விதை உற்பத்தியாளர்களும் விதை உற்பத்தி செய்து வருகின்றனர். விற்பனையை ஒழுங்குமுறை படுத்த தனியார் மற்றும் வீரிய ரகங்களை கோவை விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறையில் பதிவு செய்து பதிவு எண் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் விதை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் தனியார் ரகங்கள் மற்றும் வீரிய ரகங்கள் அனைத்தும் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்டு பதிவு எண் உள்ள ரகங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாத ரகங்களை விற்பனையாளர்கள் இருப்பு வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ அவர்கள் மீது விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983ன்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விதை ஆய்வு துணை இயக்குனர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Tags : action producers ,
× RELATED கலெக்டர் அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் துவக்கம்