×

மணமேல்குடி பகுதியில் கடும் தட்டுப்பாடு ஒரு குடம் தண்ணீர் ரூ.10க்கு வாங்கும் அவலம்

மணமேல்குடி, மே 16: தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. கஜா புயல் காரணமாக சில மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்தது. கடந்த சில ஆண்டுகளாகவே நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை போதியளவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்து இருக்கிறது. இதனால் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குளங்களும், ஏரிகளும் வறண்டு காணப்படுகின்றன. கோடை வெயில் கடுமையாக இருப்பதாலும், போதிய மழை இல்லாததாலும் விவசாய நிலங்களும் வறண்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் கடலோர பகுதியான கட்டுமாவடி முதல் ஏனாதி வரையான பல கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. மக்கள் தொகை அதிமுகள்ள மணமேல்குடியிலும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இப்பகுதிகளில் பல இடங்களில் வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே பைப் லைன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அந்த தண்ணீரும் குடிப்பதற்கு ஏதுவாக இல்லாததால் அதை வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்துகின்றனர். பல பகுதிகளில் கிராம பஞ்சாயத்துகளில் உள்ளவர்கள் சரியாக தண்ணீர் திறந்து விடுவது கிடையாது. மேலும் குடிநீருக்காக மினி டெம்போவில் வரும் குடிநீரை ஒரு குடம் 10 ரூபாய் என்று வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமாவடி, காரக்கோட்டை, பிள்ளையார்திடல், மணமேல்குடி, அம்மாப்பட்டினம், விச்சூர் போன்ற பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு அதை மினி டெம்போவில் விற்பனை செய்கிறார்கள். இந்த தண்ணீர் ஒரு குடம் பத்து ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஆழ்துளை கிணற்றில் நீர் வற்றியுள்ளதால் இந்த தனியார் குடிநீர் விற்பனை நிலையங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வாகனங்களும் சரியாக வருவதில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே தமிழக அரசு  இப்பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கவும், நிலத்தடி நீரை சேமிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களுக்கு இலவசமாக சுத்தமான குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகளில் தினமும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : area ,Manamkuldi ,
× RELATED வாட்டி வதைக்கும்...