×

இலங்கையில் குண்டு வெடிப்பு எதிரொலி வேதாரண்யம் கடலோர பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு இலங்கை தமிழர்களின் வீடுகளிலும் சோதனை

வேதாரண்யம்,மே  16: வேதாரண்யம் தாலுகா கடற்கரையோர கிராமங்களில் இலங்கையில் குண்டு வெடிப்பு சமபவங்களின் எதிரொலியாக கடந்த 25 நாட்களாக தீவிர கண்காணிப்பு ரோந்து பணி நடைபெறுகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை   அடுத்தடுத்து நடந்த 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.  இதன் எதிரொலியாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு அருகாமையில் கோடியக்கரை இருப்பதால் குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் கோடியக்கரை கடலோர பகுதி வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கருதி வேதாரண்யம், ஆறுகாட்டுதுறை, மணியன்தீவு, புஷ்பவனம், வௌ்ளப்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி, பெரியகுத்தகை, கோடியக்கரை  உள்ளிட்ட  கடலோர கிராமங்களில் கடலோர காவல் குழும போலீசார், வேதாரண்யம் சட்ட ஒழுங்கு போலீசார் கடந்த 25 நாட்களாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கியூ  பிராஞ்ச்  போலீசார் கடற்கரை முழுவதும் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



 வேதாரண்யம் கடற்கரை வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில்  ஆட்கள் வந்தாலும் அல்லது வெளிநாட்டு படகு நடமாட்டம் இருந்தாலோ உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களிடம்    போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் கோடியக்கரை, வேதாரண்யம், புஷ்பவனம், செம்போடை ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக தங்கி உள்ள இலங்கை தமிழர்களின் வீடுகளில் உள்ள நபர்களின் ஆவணங்கள் மற்றும் அவர்களது விபரங்கள் சரியாக உள்ளனவா என்று சோதனை செய்தனர். மேலும் வேதாரண்யம் தாலுகாவிலுள்ள  11 சோதனை சாவடிகளிலும், வாகன தணிக்கையும் தீவிரமாக நடைபெறுகிறது.  சட்டம் ஒழுங்கு போலீசார், கடலோர காவல்படை போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் என அனைத்து உளவுத்துறை போலீஸ்சார்களும் கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  தொடர் கண்காணிப்பில் வேதாரண்யம் கடற்கரை பகுதிகளில் இருப்பதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Sri Lankan ,area ,Police searches ,Sri Lankan Tamils ,
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை