×

ஆழியாருக்கு சுற்றுலா வந்த காதல்ஜோடிகளை வீடியோ எடுத்து மிரட்டல்

பொள்ளாச்சி, மே 15:  பொள்ளாச்சியை அடுத்த ஆழியாருக்கு சுற்றுலா வந்த காதல் ஜோடிகளை படம் எடுத்து மிரட்டிய வாலிபர்களை போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். இதையடுத்து அங்கு, கண்காணிப்பு பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதிலும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து சென்றாலும், தினமும் காதல் ஜோடிகள் வருகை தொடர்ந்து கொண்டிருகிறது.
இதில், வெளியூர்களில் இருந்து வரும் காதலர்கள் ஜோடியாக சுற்றுவது தொடர்கிறது. அதிலும் சிலர் ஆழியார் அணை முன்புள்ள பூங்காவை தொட்ட மாந்தோப்பிற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவ்வாறு மறைவான இடத்திற்கு செல்லும்போது, மர்மநபர்கள் கண்காணித்து மாந்தோப்பில் புகுந்து,  காதல்ஜோடிகளை மிரட்டி பணம் கேட்பது தொடர்கிறது.

தற்போது கோடை விடுமுறை என்பதால், ஆழியாருக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் நேற்று முன்தினம், ஆழியார் பூங்கா அருகே மாந்தோப்பு பகுதியில் சுற்றித்திரிந்த காதல் ஜோடியை படம் எடுத்த மர்மநபர் இருவர், அவர்களை மிரட்டி நகை மற்றும் பணம் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் கொடுக்க முடியாது என்று தெரிவித்து சத்தம் போட்டனர்.
இதையறிந்த பிற சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த  பொதுமக்கள் சிலர், காதல் ஜோடியை மிரட்டிய நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆழியார் போலீசார், அந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். ஆனால் போலீசாரோ, அவர்களை கைது செய்யாமல் எச்சரிக்கை விடுத்து அனுப்பியதாக  கூறப்படுகிறது. இப்படி ஆழியாருக்கு வரும் காதல் ஜோடிகள் மட்டுமின்றி, குடும்பத்துடன் வரும்  சுற்றுலா பயணிகளையும்  மர்மநபர்கள் மிரட்டுவது தொடர்வதால், அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lovers ,tour ,Aliyar ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...