பொள்ளாச்சி, மே 15: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் வனத்தில் உள்ள கோழிக்கமுத்தி முகாமில், வனத்துறை மூலம் 25க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகிறது. இதற்கிடையே, வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்களுக்கு, மயக்க ஊசி செலுத்தி யானைகளை எவ்வாறு பிடிப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வனச்சரகத்திற்குட்பட்ட வனவர்கள், வனச்சரகர்கள், கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டாப்சிலிப் அருகே கோழிக்கமுத்தியில் உள்ள யானைகள் முகாமில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் மனோகரன் பயிற்சி அளித்தார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அட்டகாசம் செய்யும் யானைகளை பிடித்து பராமரிப்பது மட்டுமின்றி, விலங்குகளை பிற இடத்துக்கு கொண்டு செல்வது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளை பிடிப்பதற்கு முன்பு எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், மயக்க ஊசியில் செலுத்தும் மருந்தின் அளவுகள் குறித்து தெரிந்து கொண்டு, துப்பாக்கி மூலம் மயக்க ஊசிகளை செலுத்தி பிடிப்பதற்கான செயல்முறை அளிக்கப்பட்டது. மேலும் யானை உள்ளிட்ட விலங்குகள் இனப்பெருக்க காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.