காளையார்கோவில், மே 15: காளையார்கோவிலில் தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தபால் அலுவலகம் அருகில் பல வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட வேளாண் அலுவலர் குடியிருப்புக் கட்டிடம் எந்த பயன்பாடுமின்றிச் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. காளையார்கோவிலில் தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தபால் அலுவலகம் அருகில் வேளான் அலுவலர் குடியிருப்புக் கட்டிடம் பல வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டு சில காலம் பயன்பாட்டில் இருந்தது. தற்போது எந்த பயன்பாடும் இல்லாமல் புதர்மண்டித் தனி நபரின் சாக்குக் குடோனாகவும், இரவுநேர பாராகவும் விஷபூச்சிகளின் இருப்பிடமாகவும் உள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், நல்ல நிலையில் உள்ள கட்டிடத்தைச் சிறிதளவு பராமரிப்புச் செய்து வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு அலுவலகத்தை கொண்டு வரலாம். இல்லையென்றால் சுத்தம் செய்து விஷப்பூச்சிகளினால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தவிர்க்கலாம் என்று கூறினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.