ஈரோடு, மே 15: ஈரோடு மாவட்டம் காங்கயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் வாக்குசாவடியில் மக்களவை தேர்தல் மறுவாக்குப்பதிவுக்கு பூத் சிலிப் அச்சடித்து விநியோகம் செய்யப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி நடந்த மக்களவை வாக்குப்பதிவின் போது தவறு நடந்ததாக புகார் எழுந்த 13 வாக்குச்சாவடிகளில் வரும் 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஈரோடு மக்களவை தொகுதி காங்கயம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறுவாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு மீண்டும் பூத் சிலிப் வழங்கப்பட உள்ளது.இதற்காக பூத் சிலிப் அச்சடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. வாக்குப்பதிவு நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு பூத் சிலிப் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும், அனைத்து வாக்காளர்களுக்கும் முழுமையாக பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் உறுதி செய்வார்கள் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.