×

விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

விருத்தாசலம், மே 15: விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் இரண்டு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடியில் உள்ள ஒரு பகுதியில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் ஆலடி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆலடி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் பகுதியில் மட்டும் குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் போர்வெல் நீர்மட்டம் குறைந்து போயுள்ளது. அதனால் சீராகத்தான் தண்ணீர் விட முடியும் என கூறினர். போதுமான அளவு குடிநீர் கிடைக்காததால் எந்த வேலைகளையும் எங்களால் செய்ய முடியவில்லை. எனவே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம் எனத் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் ஆலடி-விருத்தாசலம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மற்றொரு சம்பவம்: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள ரூபநாராயண நல்லூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நிலவி வரும் கோடை வெப்பத்தின் காரணமாக போர்வெல்லில் நீர்மட்டம் குறைந்து போதுமான அளவுக்கு குடிநீர் தொட்டியில் நீரேற்றம் செய்ய முடியவில்லை. இதனால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்காமல் தினமும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து அருகிலுள்ள பூவனூர், ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்தனர். இதனால் அப்பகுதி மக்களுக்கும் ரூபநாராயணநல்லூர் மக்களுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் அவர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்தனர். இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரூபநாராயணநல்லூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி, தனிப்பிரிவு காவலர் ஆறுமுகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : places ,road ,Vriddhachalam ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...