சிவகிரி, மே 15: சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்சவத்தின் 6ம் நாளையொட்டி முத்துக்குமார சுவாமிக்கு காய்கனி அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது. சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா கடந்த 9ம் தேதி விழா துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மூலவர் பாலசுப்பிரமணியர், உற்சவர் முத்துக்குமார சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 6ம் நாளையொட்டி சிவகிரி ஜமீன்தார் சேவுகப்பாண்டிய விக்னேஸ்வர சின்னத்தம்பியார் தலைமையில் ஊர் செழிக்கவேண்டி உற்சவர் முத்துக்குமார சுவாமிக்கு காய்கனி அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது. பூஜைகளை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டர் செய்திருந்தார். விழாவில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.