×

ஆலங்குளத்தில் அதிகாரிகள் ஆய்வு காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

ஆலங்குளம், மே 15: ஆலங்குளம் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார கடைகளில் திடீர் ஆய்வு நடத்திய சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு துறையினரும், பேரூராட்சி அதிகாரிகளும் காலாவதியான உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர். சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குனர் நளினி உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் பெத்துராஜ், உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர் ரவி, ஆர்ஐ ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் சித்தன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஹரிஹர சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் கங்காதரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆலங்குளம் பழைய, புதிய பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.

 இதில் தயாரிப்பு தேதி குறிப்பிடாத, காலாவதியான திண்பண்டங்கள், உணவுப்பொருட்கள், திறந்த வெளியில் ஈக்கள் மொய்க்க கூடிய திண்பண்டங்கள், கெட்டுப்போன மாம்பழங்கள் போன்றவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். பின்னர் இவற்றை பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கிற்கு கொண்டுசென்று கொட்டி  அழித்தனர். சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் மற்றும் தடைசெய்யபட்ட பான் மசாலா, குட்கா  பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியதோடு பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒரே நாளில் மேற்கொண்ட ஆய்வில் சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான பொருட்கள் கைப்பற்றபட்டு அழிக்கப்பட்டன. ஆய்வில் கிராம காவலர்  சுப்பிரமணி மற்றும் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Alangulam ,
× RELATED அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி