×

தெற்கு காரசேரி கிராமத்தில் சூறைக்காற்றில் சேதமான வாழைகளுக்கு இழப்பீடு

செய்துங்கநல்லூர், மே 15: தெற்குகாரசேரி கிராமத்தில் சூறைக்காற்றில் சாய்ந்த வாழைக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேரகுளம் சுற்று பகுதியில் உள்ள தெற்கு காரசேரி குளம், வல்லகுளம், கால்வாய் குளம், வீரளபேரி குளம், அப்பன்குளம் உள்பட குளங்கள் மூலமாக சுமார் 9 லட்சம் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு கசலி, மலை ஏத்தம், நாடு, சக்கை, கற்பூரவல்லி உள்பட பல ரகங்களில் வாழை பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது இந்த வாழை பயிர்கள்  அறுவடைக்கு தயாராகிவிட்ட நிலையில் திடீர் சூறைக்காற்றால் 50 சதவீதம் வாழை சரிந்து விட்டது.   இது குறித்து தெற்கு காரசேரியை சேர்ந்த விவசாயி சுந்தர் என்பவர் கூறும் போது, ‘நாங்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாழை பயிர் செய்துள்ளோம். வரும் மாதம் முதல் அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த வாரம் அடித்த சூறைக்காற்றில் சுமார் 4 லட்சம் வாழைகள் சாய்ந்து விட்டன. இதனால் வாழை விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகி உள்ளனர். எனவே சேதமான வாழைகளுக்கு நஷ்டஈடு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : village ,South Kasseriyar ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...