ஓமலூர், மே 15: ஆந்திராவில் பிரம்பு குச்சியால் தயாரிக்கப்பட்ட நாற்காலி, ஊஞ்சல்கள், ஓமலூரில் சாலையோரம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். குறைந்த விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் சாலையோரங்களில் பிரம்பு ஊஞ்சல்களின் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. பிரம்பு குச்சியால் தயார் செய்த பொருட்கள் நீண்ட நாட்கள் உழைப்பதுடன், அழகு நிறைந்த பொருளாகவும் வீடுகளில் வைக்கப்படுகிறது. மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல்களில் வரவேற்பு அறைகளில் இதுபோன்று பிரம்பு குச்சியை கொண்டு தயார் செய்த சேர்களை இன்று அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பிரம்பு பொருட்களை அனைத்து தரப்பு மக்களிடமும் மவுசு சற்று அதிகமாகவே உள்ளது. ஆந்திர மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட ஊஞ்சல் மற்றும் நாற்காலிகளை சிலர், லாரிகள் மூலம் ஓமலுருக்கு கொண்டு வந்து சாலையோரத்தில் கடைபோட்டு விற்பனை செய்து வருகின்றனர். பிரம்பு ஊஞ்சல் மற்றும் பிரம்பு பொருட்கள் விலை ₹2 ஆயிரத்தில் இருந்து ₹4 ஆயிரம் வரை விற்பனை செய்யபடுகிறது.
விற்பனை குறித்து தஞ்சையை சேர்ந்த பிரம்பு ஊஞ்சல் விற்பனையாளர் பிரபு கூறும்போது, நான் கடந்த ஐந்து ஆண்டுக்கும் மேலாக பிரம்பு குச்சியால் தயார் செய்த கட்டில், ஊஞ்சல், பிறந்த குழந்தைகளுக்கான தொட்டில், சேர், நாற்காலி, சிறிய, சிறிய கூடைகள் என பலவற்றை விற்பனை செய்து வருகிறேன். பாரம்பரிய பொருட்களை பாதுகாப்பதுடன் அதை நாம் பயன்படுத்த வேண்டும். உடல் சோர்வு, தூக்கமின்மை போன்றவை நீங்க இந்த பிரம்பு குச்சியால் தயார் செய்த கட்டில் அல்லது சேர்களை பயன்படுத்தலாம் என்றார்.