×

பரமக்குடி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை

பரமக்குடி, மே 15: பரமக்குடி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பரமக்குடி ரயில் நிலையத்திற்கு தினமும் இரண்டு முறை சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில், வாரம் மூன்று முறை கன்னியாகுமரி மற்றும் திருப்பதியிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில், வாரம் ஒருமுறை உ.பி., ஓடிசாவுக்கு எக்ஸ்பிரஸ், மதுரையிலிருந்து தினமும் மூன்று முறை பாசேஞ்சர் ரயில் ராமேஸ்வரத்திற்கு வந்து செல்கிறது. ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறது. இதனால் தினமும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் உள்பட வட மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். கடந்த காலங்களில் ரயில் நிலையங்களில் அதிகளவில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பரமக்குடி ரயில் நிலையத்தின் ஒரு பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளதால், குற்றச்சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளை அதிகளவில் பார்க்க முடிகிறது.


பயணிகள் பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தடுக்க, ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கேமரா இல்லாததை பயன்படுத்தி குற்றவாளிகள் பயணிகளிடம் கைவரிசை காட்டி விட்டு போலீசாரிடம் இருந்து தப்பி விடுகின்றனர். இதனால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சமூக ஆர்வலர் செந்தில்குமார் கூறுகையில், பரமக்குடி ரயில் நிலையத்தில் எந்தவிதமான பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இரவு நேரங்களில் வரும் பயணிகள் குற்றச்சம்பவங்களுக்கு பயந்துகொண்டு தங்கள் பொருள்களை பாதுகாத்து வருகின்றனர். மாவட்டத்தின் முக்கியமான நகரமாக உள்ள பரமக்குடி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா வைக்கவேண்டும் என பலமுறை விபத்து மீட்பு சங்கத்தின் சார்பாக மனு அளித்தும் ரயில்வே நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை. அதுபோல் ரயில் நிலையத்தில் குறைந்த பட்ச பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இரவு நேரங்களில் ரயில் நிலையம் முதல் ஆர்ச் வரை மின்வசதி இல்லாமல் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மின்விளக்கு வசதி நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என கூறினார்.

Tags : railway station ,Paramakudi ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...