துறையூர், மே 15: துறையூர் அருகே திருமானூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. மளிகை கடை உரிமையாளரான இவர் நேற்று முன்தினம் காலை தனது மகள் ஊரான நெட்டவேலம்பட்டியில் நடைபெறும் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து இவர்கள் இரவு 10 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த பீரோவும் திறக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது. அதேபோல் இவர் வீடு அருகே உள்ள விசாலாட்சி என்ற மூதாட்டியின் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.12 ஆயிரத்தையும் மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் அருகில் உள்ள சுந்தரம் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் அங்கு நகை, பணம் ஒன்றும் இல்லாததால் வீட்டில் இருந்த பொருட்களை வாரி இறைத்து விட்டு சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.