திருவெறும்பூர், மே 15: திருவாரூரில் இருந்து திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள ஐஓசி கிடங்குக்கு குழாய் வழியாக பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் கொண்டு வருவதற்கு குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. துவாக்குடி அருகே உள்ள மேலமாங்காவனம், திருநெடுங்களம், வாழவந்தான் கோட்டை பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் குழாய் அமைக்கும் பணியை சில நாட்களுக்கு முன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் துவாக்குடி பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சாமி நடராஜன், மாவட்ட செயலாளர் சிதம்பரம், பொருளாளர் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். எண்ணெய் குழாய்களை விளைநிலம் இல்லாத பகுதியில் அமைத்து செயல்படுத்த வேண்டும். விளைநிலங்களில் குழாய்கள் அமைக்க கூடாது என மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.