×

மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்க வேண்டும் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் தீர்மானம்

கிருஷ்ணகிரி, மே 15: கிருஷ்ணகிரியில், மாவட்ட கிளை ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் மாதன், நாமக்கல்லில் கடந்த மாதம் 28ம் தேதி நடந்த 20ம் ஆண்டு நிறைவு விழா மாநாட்டு நிகழ்வுகள் மற்றும் வருகிற ஜூன் மாதம் 21ம் தேதி கொண்டாடப்படவுள்ள ஓய்வூதியர் எழுச்சி தினம் குறித்து பேசினார். நிர்வாகிகள் பழ.வெங்கடாஜலம், நந்தகோபால், கிருஷ்ணப்பா, மோகன், சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் தீர்மானங்களை முன்மொழிந்து மாவட்ட பொருளாளர் ஜெகன்நாதன் பேசினார். ஆதார கிளை பொருளாளர் சுந்தரம், சங்க நிதிநிலையினை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2018ன் கீழ் ஓய்வூதிய சந்தாதாரர் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கிட ஆவண செய்ய வேண்டுமாய் மாவட்ட கருவூல அலுவலரை கேட்டுக்கொள்வது. 80 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு காலதாமதமின்றி கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்வது. தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் (ஒப்படைப்பு) படி ஒப்படைப்பு பிடித்தம் ஆரம்பித்த நாள் முதல் 15 ஆண்டுக்குள் நிறைவினை கணக்கிட்டு ரீஸ்டோர் செய்திட ஆவண செய்யுமாறு மாவட்ட கருவூல அலுவலரை கேட்டுக்கொள்வது.

அரசாரணைப்படி, திருத்தி அமைக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களை காலதாமதமின்றி ஓய்வூதியர்களுக்கு வழங்கிட ஆவண செய்ய வேண்டும். மாவட்ட கருவூல அலுவலரால் 2 மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை தவறாமல் நடத்துவதற்கு ஆவண செய்யுமாறு மாவட்ட கருவூல அலுவலரை கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது