×

முத்துப்பேட்டை பகுதியில் தெரு விளக்குகளை உடன் சரி செய்ய வேண்டும் பேரூராட்சி அலுவலரிடம் மக்கள் கோரிக்கை மனு

முத்துப்பேட்டை, மே 15: முத்துப்பேட்டை பகுதியில் தெரு விளக்குகளை உடன் சீரமைத்து சரி செய்ய வேண்டும் என முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தலைமையில் மக்கள் பேரூராட்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் கஜா புயலுக்கு பிறகு அணைத்து மின் கம்பங்களும் சீரமைக்கப்பட்டு புதிய எல்ஈடி பல்புகள் பொருந்தப்பட்டது. புதிதாக பொருத்தப்பட்ட விளக்குகளை ஒப்பந்தம் எடுத்த பணியாளர்கள் சரிவர பணியை மேற்கொள்ளாததால் பல மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் 18 வார்டுகளிலும் பல இடங்களில் தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு காணப்படுகிறது. இதனை பார்வையிட்டு எரியாத மின் விளக்குகளை சரி செய்து எரிய விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 ஆனால் அந்த பணியை பேரூராட்சி மேற்கொள்ளாததால் பல இடங்கள் இருண்டுள்ளது. இந்நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 3வது வார்டு பகுதியில் சில்லயப்பா தர்கா, சுடுகாடு, புளிய மரத்துக்குளம் ஆகிய பகுதியில் தெருவிளக்கு நீண்டகாலமாக எரியவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பல்வேறு வகையில் சிரமத்துக்குள்ளாயினர். மேலும் தற்போது ரமலான் நோன்பு துவங்கியுள்ளதால் இரவில் இஸ்லாமிய பெண்கள் சென்று வருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் முதியவர்கள் பெண்கள் இரவில் நடமாட தயங்கி வருகின்றனர். இதனால் தெருவிளக்குகளை சரி செய்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சரி செய்யவில்லை. இதனால் அதிருப்தியடைந்த முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் அப்துல் வகாப் தலைமையில் மக்கள் பேரூராட்சியில் நேற்று மனு கொடுத்தனர். இதில் மேற்கண்ட பகுதியில் தெருவிளக்குகளை உடன் சரி செய்து தருவதுடன் பேரூராட்சி பகுதியில் இதுபோன்று உள்ள அணைத்து பகுதியிலும் பழுதடைந்த நிலையில் உள்ள மின் விளக்குகளையும் உடன் சரி செய்து எரிய விட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி இரண்டாம் நிலை அலுவலர் செல்வகுமார் உடன் நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகள் எரிய விடப்படும் என்று தெரிவித்தார்.

Tags : Panchayat ,area ,Muthupettai ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு