×

கொள்ளிடம் ஆற்றங்கரை தெருவில் அரைகுறையாக நிற்கும் டிரான்ஸ்பார்மர் மாற்றும் பணி 2 வருடமாக மக்கள் கடும் அவதி

கொள்ளிடம், மே 15: கொள்ளிடம் ஆற்றங்கரை தெருவில் இரண்டு வருடங்களாக இயக்கப்படாத மின்மாற்றியை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரை தெரு மற்றும் சுற்று புறத்தைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் குறைந்த மின் அழுத்தம் இருந்து வந்தது. இதனால் அப்பகுதியில் மின் விளக்குகள் மங்கலாக இருந்து வந்ததுடன், மின்சாதனப் பொருட்களை இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரமப்பட்டு வந்தனர். இதனால் சீரான அழுத்தமுள்ள மின்சாரம் வழங்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனடிப்படையில், கொள்ளிடம் ஆற்றங்கரை தெருவிலேயே மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது.

மின்மாற்றியில் பொருத்த வேண்டிய சில பொருட்கள் மட்டுமே பொறுத்தப்பட்டது. மின்மாற்றி அமைக்கும் பணி முழுமை பெறாமலேயே நின்று விட்டது. இரண்டு வருடங்களுக்கும் மேலாகியும், மின்மாற்றியை முறைப்படுத்தி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஒதுக்குப்புறமாக மின்மாற்றியை அமைக்காமல் ஆற்றங்கரை தெருவிலேயே மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று முழுமையடையாமல் உள்ளது. தெருவிலேயே மின்மாற்றி வைப்பதற்கு தெருவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிக மின் அழுத்தம் உள்ள மின்சாரம் வழங்குவதற்காக மின்மாற்றி அமைக்கும் பணி அரை குறையாக நின்றுவிட்டது. இதுவரை குறைந்த அழுத்த மின்சாரமே இப்பகுதியில் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே மின்மாற்றியை ஒதுக்குப் புறத்தில் அமைத்து மின்சாரம் வழங்க வேண்டும். இல்லையேல் தெருவில் உள்ளவர்களுக்கு இடையூராகவும், எந்த பயனுமின்றியும் உள்ள மின்மாற்றியை உடனே அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...