×

கூடுதல் விலைக்கு ஆவின் பால் பாக்கெட்கள் விநியோகம்

நாகர்கோவில், மே 14: ஆவின் பால் பாக்கெட்களில் குறிப்பிட்டுள்ள விலையிலேயே சில்லரை விலை கடைகளிலும் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது. கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையம் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் தாமஸ் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் சிதம்பரம்பிள்ளை வரவேற்றார். பொருளாளர் சொரிமுத்து வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார். நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தினுள் காணப்படும் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.

பயணிகளுக்கு போதுமான இருக்கை வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேன், பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போதுமானஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பானதாகவும், தரமான நிலையிலும், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையம் முதல் ஒழுகினசேரி வரையுள்ள அவ்வை சண்முகம் சாலையில் ஆக்ரமிப்புகள் அகற்றப்படவும், பிளாட்பாரம் அமைக்கப்படவும் வேண்டும்.

ஆவின் பாலகத்தில் இருந்து தனி நபர்கள் மொத்தமாக பால் கொள்முதல் செய்து அதனை பொதுமக்களுக்கு கூடுதல் விலையில் விற்பனை செய்வதை தடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை தலைவர்கள் ராஜேந்திரன், பெருமாள், இணை செயலாளர் தேவசகாயம், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டான்லி, மணீந்திரன், விஷ்ணு, லீலா, தமிழ்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். செல்வராஜ், சாலமன் நன்றி கூறினார்.

Tags : Aavin ,
× RELATED ஆவின் நிறுவனம் நெய் தள்ளுபடி விலையில் விற்பனை