×

மகள் திருமண வரவேற்புக்கு சென்ற ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: தடுக்க முயன்ற மனைவிக்கு வெட்டு

கீழ்ப்பாக்கம், மே 14: மகள் திருமண வரவேற்புக்கு சென்ற ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற மனைவிக்கும் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அயனாவரம், டிக்காகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டீன் (45). ஆட்டோ டிரைவர்.

இவரது மகள் தீபராணிக்கு கடந்த 10ம் தேதி திருமணம் நடைபெற்றது. மீஞ்சூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொள்ள உறவினர்களை பஸ்சில் அனுப்பிய ஜெபஸ்டீன், தனது மனைவி பிரிசில்லாவை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மீஞ்சூருக்கு பைக்கில் புறப்பட்டார்.

அப்போது 2 பைக்குகளில்  வந்த 5 பேர், ஜெபஸ்டீனை மடக்கி சரமாரியாக வெட்டினர். இதை பார்த்து அவரது மனைவி கதறினார். ஆனால் அவர் கண்ணெதிரிலேயே ஜெபஸ்டீனை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியது. தடுக்க முயன்ற பிரிசில்லாவுக்கு கையில் வெட்டு விழுந்தது.
தகவலறிந்து அயனாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, படுகாயமடைந்த பிரிசில்லாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஜெபஸ்டீன் சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.  
 
விசாரணையில், கடந்த மாதம் டிக்காகுளம் பகுதியை சேர்ந்த வினோத் (19) என்பவருக்கும், 17 வயது சிறுமிக்கும் நடைபெற இருந்த திருமணத்தை ஜெபஸ்டீன் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத் தரப்பினர் ஜெபஸ்டீனை வெட்டி கொன்றது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக டிக்காகுளம் பகுதியை சேர்ந்த மகேஷ் (25) என்பவரை நேற்று முந்தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். வினோத் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags : auto driver ,wedding reception ,
× RELATED குன்றத்தூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர்...