×

திருப்பதியில் பத்மாவதி- சீனிவாசர் திருக்கல்யாணம் கோலாகல தொடக்கம்

திருமலை, மே 14: திருப்பதியில் பத்மாவதி- சீனிவாசர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளில் தங்க யானை வாகனத்தில் மலையப்பசுவாமி உலா வந்தார். தங்க பல்லக்குகளில் தாயார்கள் எழுந்தருளி அருள்பாலித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்மாவதி- சீனிவாசர் திருக்கல்யாண உற்சவம் (பரினய உற்சவம் ) கோலாகலமாக நேற்று தொடங்கியது. இதையொட்டி திருமலையில் உள்ள நாராயணகிரி பூங்காவில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடையில் நடந்தது. உற்சவத்தின் முதல் நாளான நேற்று மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தங்க யானை வாகனத்தில் நான்குமாடவீதி வழியாக ஊர்வலமாக புறப்பட்டு நாராயணகிரி பூங்காவை வந்தடைந்தார். தொடர்ந்து  தேவி, பூதேவி சமேத உற்சவ மூர்த்திகளும் தங்கப் பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.


இதையடுத்து பூங்காவில் மணப்பெண்களை பார்த்து பெருமாள் முதலில் மாலை மாற்றினார். பின்னர் சம்பிரதாயப்படி பட்டுப்புடவைகள் மற்றும் சீர்வரிசை வழங்கி, வேத மந்திரங்கள் முழங்க திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் மல்லிகை மலர்களால் செய்யப்பட்ட பந்துகளை ஒருவர் மீது ஒருவர் வீசி திருக்கல்யாண சம்மதத்தை தெரிவித்துக்கொண்டனர்.
இதில் இறைவனது திருக்கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட மகிழ்ச்சியால் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டனர். இதையடுத்து தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. அப்போது நான்கு வேதங்கள் முழங்க அன்னமய்யா கீர்த்தனையில் பக்திப் பாடல்கள் பாடப்பட்டது. இதில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர், தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் லட்சுமி காந்தம், துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உட்பட அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருக்கல்யாண உற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று மலையப்ப சுவாமி தங்க குதிரை வாகனத்திலும் பத்மாவதி தாயார்கள் தங்கப் பல்லக்கிலும் பரிணய மண்டபத்திற்கு எழுந்தருள உள்ளனர்.

Tags : Pathumavathi - Srinivasar ,Thirukkalyanam Kolakala ,Tirupati ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!