×

தொழிலாளி திடீர் சாவு மனைவி அடித்துக்கொன்றதாக உறவினர்கள் தகராறு காளஹஸ்தி அருகே பரபரப்பு

காளஹஸ்தி, மே 14: காளஹஸ்தி அருகே தொழிலாளி திடீரென இறந்தநிலையில் அவரது மனைவி அடித்துக்கொன்றதாக உறவினர்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி அடுத்த தொட்டம்பேடு மண்டலம், தங்கேல்லப்பாளையம் பஞ்சாயத்து, திக்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜக்கா ரெட்டி(45), தொழிலாளி. இவருக்கும் தொட்டம்பேடு மண்டலத்தில் ஞானம்ம கண்டிகை கிராமத்தை சேர்ந்த ஆதிலட்சுமிக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆதிலட்சுமி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது முதல் ஜெக்காரெட்டி அடிக்கடி ஞானம்மகண்டிகைக்கு வந்து செல்வாராம்.

நேற்றுமுன்தினம் ஜெக்காரெட்டி அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்து விட்டு ஞானம்மகண்டிகைக்கு வந்தார். பின்னர் போதை மயக்கத்தில் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டு முன் இருந்த தரையில் படுத்து தூங்கினார்.
தொடர்ந்து அவர் நீண்ட நேரமாக எழாததால் சந்தேகமடைந்த ஆதிலட்சுமி வந்து பார்த்தபோது ஜெக்காரெட்டி தூக்கத்திலேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார். இதையறிந்து அங்கு வந்த ஜெக்காரெட்டியின் உறவினர்கள் ஆதிலட்சுமி அவரை அடித்துக் கொன்றிவிட்டு நாடகமாடுவதாக தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தகவலறிந்து அங்கு வந்த காளஹஸ்தி இரண்டாம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவய்யா மற்றும் போலீசார் இரு பிரிவினரிடமும் சமரசம் பேசினர். மேலும் ஜெக்காரெட்டியின் சட்டையை கழட்டி பார்த்தபோது அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால் வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் ஜெக்காரெட்டியின் உறவினர்கள், அவரது சாவில் தங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக மனு அளித்தனர்.

Tags : Relatives ,Kalahasti ,
× RELATED ஸ்ரீகாளஹஸ்தியில் பேருந்து யாத்திரை சென்ற முதல்வர் ஜெகன்மோகன்