தொட்டியம், மே 14: தொட்டியம் அருகே தோளுர்பட்டியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தோளுர்பட்டியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. கோயில் திருவிழாவில் சேர்ந்த உண்டியல் பணத்தை அறநிலையத்துறையினர் எடுத்து செல்லுமாறு தனிநபர் புகார் மனு அனுப்பியிருந்தாராம். இதையடுத்து நேற்று உண்டியல் பணத்தை எடுத்துசெல்ல அறநிலையத்துறையினர் வந்துள்ளனர். ஆனால் அதற்கு கிராமத்தினர் இதுபொதுக்கோயில் என்பதால் பணத்தை எடுத்து செல்லகூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் அறநிலையத்துறையினர் திரும்பி சென்று விட்டனர். இந்நிலையில் அதே ஊரில் ஒரு சமுதாயத்தினரின் நான்கு வீடுகளின் ஓடுகள், அங்கு நிறுத்தியிருந்த கார் ஆகியவை உடைத்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தொட்டியம், காட்டுப்பபுத்தூர்; போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே வீடுகள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட சமூகத்தினர் மற்றொரு தரப்பினர் ஓடுகளை உடைத்ததாக கூறிவரும் நிலையில் தாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என அத்தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து முசிறி போலீஸ் டிஎஸ்பி தமிழ்மாறன் தலைமையிலான போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே தோளுர்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் தொட்டியம் காவல் நிலையம் முன் திரண்டதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தின்போது சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.