×

பரமக்குடி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

பரமக்குடி, மே 14: பரமக்குடி நகர் பகுதிகளில் 3 முதல் 5 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பரமக்குடி நகர் பகுதியில் பரமக்குடி நகர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பரமக்குடி நகர், பொன்னையாபுரம், காட்டுபரமக்குடி, வைகை நகர், எமனேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

மின்சாரம் பற்றாக்குறை காரணமாக சில நாட்கள் 3 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது, மின்சாரம் போதிய அளவில் எல்லா இடங்களிலும் கிடைத்த போது, எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் தொடர்ந்து மின்சார விநியோகத்தை தடைசெய்து வருகிறது மின்சார வாரியம்.இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மின்நாரம் தடை செய்யப்படுவதால் அரசு அலுவலகங்களில் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. தாலுகா மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பெறவேண்டிய சான்றிதழ்களை பெற முடியாமல் மாணவர்கள் தவியாய் தவித்து வருகின்றனர். அதைபோல், பரமக்குடி ஒட்டியுள்ள சத்திரக்குடி மின்சார வாரியத்திற்கு உட்பட்ட ஆற்றுப்படுகையில் விவசாயத்திற்கு பெயர்போன மஞ்சகொல்லை, சிறகிகொட்டை உள்ளிட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தானியங்கள், கத்தரி, மிளகாய் மற்றும் பருத்தி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இரவு நேரங்களில் மட்டும் மின்சாரத்தை கொடுப்பதால் விவசாய பணிகளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தால் அதை அலட்சியம் செய்து வருவதாக விவசாயிகள் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டுகின்றனர். காலை 7 மணிக்கு மின்சாரம் தடைசெய்வதால், பெண்கள் காலை வேளைகளில் பள்ளிக்கு செல்லும் குழுந்தைகளுக்கு உணவு தயார் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அறிவிப்பு இல்லாத மின்வெட்டால் விவசாய பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ராமநாதன் கூறுகையில், “பரமக்குடி மற்றும் சத்திரக்குடி மின் வாரியத்தில் கீழ் உள்ள கிராமங்களில் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் மின்சாரத்தை தடைசெய்கின்றனர். இதுகுறித்து பணியாற்றும் அதிகாரிகளின் புகார் தெரிவித்தால் அதைபற்றி கண்டுகொள்ளாமல் உள்ளனர். தினமும் சுமார் 3 முதல் 5 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நகர் பகுதிகளில் இரவு முழுவது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது’’ என்றார்.

Tags : area ,Paramakudi ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...