புதுக்கோட்டை, மே 14: புதுக்கோட்டை திருவரங்குளத்தில் அரங்குளநாதர் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் இந்த கோயிலின் வைகாசி திருவிழா கடந்த 9ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கோயிலில் பெரியநாயகி அம்மன் சன்னதியில் உள்ள உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் நிரம்பியது. இதையடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் உண்டியலை துணி போட்டு சுற்றி வைத்து உள்ளனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் கோயில் உண்டியலில் தங்களால் முடிந்த பணத்தை போடுவார்கள் என்பதால், பெரியநாயகி அம்மன் சன்னதியில் நிரம்பி உள்ள உண்டியலை திறந்து எண்ணும் வரை கூடுதலாக ஒரு உண்டியல் வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.