சீர்காழி, மே 14:சீர்காழி அம்மா உணவகம் முன்பு தேங்கி நின்ற கழிவுநீர் தினகரன் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது. சீர்காழி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் அமைக்கப்பட்டிருந்த செப்டிக் டேங்க் நிரம்பி கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நின்றது. இதனால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது. மேலும் உணவகத்திற்கு சாப்பிட வருவார்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதேபோல் பேருந்து நிலையத்திற்கு வருபவர்கள் துர்நாற்றத்தால் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை இருந்து வந்தது. அம்மா உணவகத்தில் செப்டிக் டேங்க் கழிவு நீர் தேங்கி நிற்பது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து சீர்காழி நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன் உத்தரவின்பேரில் துப்புரவு ஆய்வாளர் கலியபெருமாள், ஒப்பந்த துப்புரவு ஆய்வாளர் ஞானவேல் மற்றும் ஊழியர்கள் அம்மா உணவகத்தில் செப்டிக் டேங்கில் இருந்து வெளியேறி தேங்கி நின்ற கழிவு நீரை அகற்றி ப்ளீச்சிங் பவுடர் தெளித்து சென்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்பட்டுள்ளது. செப்டிக் டேங்கில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதை நிரந்திரமாக தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்மா உணவகத்தில் செப்டிக் டேங்க் நிரம்பி கழிவுநீர் தேங்கி நிற்பது தொடர்பாக செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.