×

கமல் பிரசாரக்கூட்டம் 16ம்தேதிக்கு மாற்றம்

கரூர், மே 14: அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மோகன்ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சின்னதாராபுரம் பேரூந்து நிலையம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம், ஈசநத்தம், ஆண்டிப்பட்டி கோட்டை, பள்ளபட்டி அண்ணா நகர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார்.இந்நிலையில், பள்ளபட்டி அண்ணா நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட கமலஹாசன் பேசுகையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான், அவர், நாதுராம் கோட்சே, நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன், அதற்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என பேசியுள்ளார்.  


கமலஹாசனின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு, இந்து அமைப்புகள் மற்றும் பாஜக போன்றவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று நடைபெற இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூறுகையில், வேலாயுதம்பாளையத்தில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம், முதல்வர் வருகை, வைகோ பிரசாரம் போன்ற காரணங்களால் அனுமதி கிடைக்கவில்லை, இதனால், பொதுக்கூட்டம் மே 16ம்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kamal ,campaign ,
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...