விழுப்புரம், மே 10: கேரளா போலீசார் அழைத்துச் சென்ற போது கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 2 பேர் விழுப்புரம் அருகே தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பாலம்மகாராஜ் மகன் பாலம்அர்ச்சுனராவ்(27). இவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பூந்துரா காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போல் கல்லா சீனுவாசராவையும் கஞ்சா வழக்கில் போலீசார் தேடிவந்தனர். இருவரும் சொந்த ஊருக்கு தப்பியோடிவிட்டதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க பூந்துரா காவல்நிலைய உதவி எஸ்ஐ யோககுமார் தலைமையிலான 5 பேர் கொண்ட போலீசார் கடந்த இருநாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். ஆந்திரா மாநில காவல்துறை உதவியுடன் அவர்களை கைது செய்தனர். இருவரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு வந்தனர்.
அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட அவர்கள் நேற்று அதிகாலையில் விழுப்புரம் புறவழிச்சாலையான எல்லீஸ்சத்திரம் சாலையை கடந்து செல்ல முயன்றபோது கைதிகள் இருவரும் சிறுநீர்வருகிறது. ஜீப்பை நிறுத்துங்கள் என்று கூறியுள்னர். அவர்களது பேச்சை நம்பிய போலீசார் சாலையோரமாக நிறுத்திவிட்டு சிறுநீர்கழிக்க அனுமதித்தனர். அவர்களுடன் இரண்டு போலீசார் பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த நிலையில் அவர்களை கீழே தள்ளிவிட்டு பாலம்அர்ச்சுனராவ், கல்லா சீனுவாசராவும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை துரத்திச் சென்றும் பிடிக்கமுடியவில்லை. அதிகாலை இருட்டு என்பதால் இருவரும் எங்கு சென்றனர் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. உடனடியாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். விழுப்புரம் டிஎஸ்பி திருமால், தாலுகா போலீசார் விரைந்து சென்று தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர். பஸ், ரயில்நிலையங்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.