விருத்தாசலம், மே 10: பெண்ணாடம் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் அம்மன் தாலி உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போய் உள்ளது.விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் எல்லையம்மன் கோயில் தெருவில் மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் பூசாரியாக இருந்து கொண்டு கோயிலை கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சாமிக்கு செய்யவேண்டிய பூஜைகள் அனைத்தையும் முடித்து இரவு கோயிலை மூடிவிட்டு பூசாரி கண்ணன் வீட்டிற்கு சென்று விட்டார். வழக்கம்போல் நேற்று காலை பூசாரி கண்ணன் பூஜை செய்வதற்காக கோயிலை திறக்க வந்துள்ளார்.
அப்போது கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து கோயில் முக்கியஸ்தர்களுக்கு தகவல் அளித்து அவர்களை வரவழைத்து அவர்களுடன் கோயில் உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த 4பவுன் தாலி மற்றும் கோயிலில் பயன்படுத்தப்படும் பித்தளை பாத்திரங்கள் மற்றும் உண்டியலில் இருந்த பணம் ஆகியவைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் சுமார் ரூ.2லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயிருக்கலாம் என தெரிகிறது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.¬¬