பள்ளிபாளையம், மே 10: பள்ளிபாளையம் அருகே மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் அடுத்தடுத்த 2 வீடுகள் எரிந்து சேதமடைந்தன.பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படையை சேர்ந்த கட்டிட தொழிலாளி மெய்நாதன். இவரது மனைவி அனிதாவுடன் கூரை வீட்டில் வசித்துவந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கட்டிட தொழிலாளி குமார். இந்நிலையில் நேற்று காலை மெய்நாதனின் கூரை வீட்டில் இருந்து திடீரென புகை வந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தவர்கள் ஓடிவந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் தீ கொழுந்து விட்டு எரியத்துவங்கியது. வெயில் நேரமாகையால் வீட்டின் அருகே நெருங்க முயவில்லை. இதனால் பொதுமக்கள் தீயை அணைக்க முடியவில்லை. தொடர்ந்து தீ அருகில் உள்ள குமாரின் ஓட்டு வீட்டுக்கும் பரவியது. இதுகுறித்து குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீ மேலும் பரவாமல் தடுத்து, அணைத்தனர். இந்த விபத்தில் மெய்நாதனின் கூரை வீடு முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. குமாரின் வீடு வெப்பம் தாங்காமல் ஓடுகள் வெடித்து சிதறின. மேலும் ட்டில் வைத்திருந்த அரிசி, மளிகை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், துணிகள் என அனைத்தும் எரிந்து சேதமானது. தகவலறிந்து அங்குவந்த குமாரபாளையம் தாசில்தார் தங்கம், வீட்டின் உரிமையாளர்களுக்கு அரசு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.