ஈரோடு, மே 10: ஈரோடு மக்களவை தொகுதி திருமங்கலம் வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மக்களவை தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 1,678 வாக்குச்சாவடியில் கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், காங்கயம் சட்டமன்ற தொகுதி வெள்ளகோவில் அருகே உள்ள திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி எண் 248ல் மாதிரி வாக்குபதிவை அழிக்காமல் தொடர்ந்து வாக்குபதிவு நடத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி கதிரவன் தேர்தல் ஆணையத்துக்கு மறு வாக்கு பதிவு நடத்த பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து வரும் 19ம் தேதி மறு வாக்குபதிவு நடத்த தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து மறு வாக்குபதிவு நடத்துவதற்கான பணிகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,`மறு வாக்குபதிவு நடத்துவதற்கான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி பள்ளியில் தயார் நிலையில் உள்ளது. வி.வி.பேட் மட்டும் இல்லாமல் இருந்ததையடுத்து கோவையில் இருந்து 20 வி.வி.பேட் கருவிகள் பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பேலட் பேப்பர் ஏற்கனவே கூடுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் ஏற்கனவே பணி செய்த, தலைமை வாக்குபதிவு அலுவலர் மற்றும் 3 அலுவலர்களுக்கு பதிலாக வேறு வாக்குசாவடியில் பணியாற்றிய அலுவலர்கள் குலுக்கல் முறையில் நியமிக்கப்பட உள்ளனர்’ என்றனர்.