×

ஸ்பிக்நகர் பகுதியில் விளைநிலங்களுக்கு சென்று விவசாயிகளிடம் திமுகவினர் வாக்குசேகரிப்பு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி அத்திமரப்பட்டி பகுதியில்  உள்ள விளைநிலங்களுக்கு சென்று விவசாயிகளை ஸ்பிக்நகர் பகுதி திமுக பொறுப்பாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கட்சியினர் சந்தித்து வாக்கு சேகரித்தனர். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி அடுத்த ஸ்பிக்நகர் அத்திமரப்பட்டி பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களிடம் ஸ்பிக்நகர் பகுதி திமுக பொறுப்பாளரும், தென்சென்னை மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் தலைமையில் கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டு வாக்குசேகரித்தனர். குறிப்பாக அத்திமரப்பட்டி பகுதி விவசாய நிலங்களில் வாழைத்தார் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘ஓட்டப்பிடாரம் தொகுதி வெற்றி வேட்பாளர் சண்முகையாவுக்கு ஆதரவு கேட்டு அத்திமரப்பட்டி விவசாயநிலங்களில் வேலை செய்யும் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தோம். அப்போது எங்களிடம் குறைகளை கூறிய விவசாயிகள், மற்றபகுதிகளில் இருபோகம் விவசாயம் நடந்து வந்தபோதும் தங்களது பகுதியில் ஒருபோகம் விவசாயம் கூட செய்யமுடியவில்லை. வாழ்வாதாரமான கோரம்பள்ளம் குளம் தூர்வாரப்படாததால் விளை நிலங்களுக்கு தேவையான நீர் கிடைக்கவில்லை என வேதனையுடன் கூறினார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என நாங்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தோம். இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகளும் திமுகவிற்கு வாக்களிப்போம் என உறுதிப்படத் தெரிவித்தனர். எனவே, இத்தொகுதியிலும் திமுக அமோக வெற்றிபெறும்’’ என்றார். பிரசாரத்தில் திமுக பேச்சாளர் பொன்னரசு, வட்டச்செயலாளர் கிருபானந்தம், நிர்வாகிகள் பால்பாண்டியன், வசந்தி பால்பாண்டியன், கோயில்பிச்சை, பாஸ்கர், ரூபன், முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : Spicknagar ,area ,farms ,DMK ,
× RELATED வாட்டி வதைக்கும்...