×

சுவற்றில் மோதி மூதாட்டி கொலை மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தம் அருகே பயங்கரம்

வேலூர், மே 10: குடியாத்தம் அருகே சுவற்றில் மோதி மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தாதிமானப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி வனரோஜா(68), இவர்களது மகன் சுதாகர், மருமகள் தீபா(32). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாராயணசாமியும், சுதாகரும் இறந்து விட்டனர். இதனால், மாமியார், மருமகள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் பொய்கையில் உள்ளது உறவினர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்ற தீபா, நேற்று காலை தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு திறந்து கிடந்தது. வீட்டில் மாமியார் வனரோஜாவை காணவில்லை. அக்கம்பக்கம் தேடியபோது வீட்டின் பின்புறத்தில் படுத்த நிலையில் இருந்தார். அவரை எழுப்ப முயன்றபோது நெற்றியில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பரதராமி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், மர்ம ஆசாமிகள், வனரோஜாவை சுவற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிந்து மூதாட்டியை கொலைக்கு காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : murderer ,mystery lovers ,web graveyard ,
× RELATED அரக்கோணம் இரட்டை கொலையில் மேலும் ஒரு வாலிபர் கோர்ட்டில் சரண்